பாமாலை 126 - இன்று கிறிஸ்து எழுந்தார்
பாமாலை 126 – இன்று கிறிஸ்து எழுந்தார்
(Jesus Christ is risen today)
Charles Wesley
லண்டன் நகரில் வசித்து வந்த சார்ல்ஸ் வெஸ்லி (Charles Wesley) என்பவர் அங்கே உள்ள ஆல்டர்ஸ்கேட் (Aldersgate) வீதியில் நடந்த ஒரு ஆவிக்குரிய கூட்டத்தில் வேண்டாவெறுப்பாகக் கலந்துகொள்ள நேரிட்டது. அங்கே கொடுக்கப்பட்ட செய்தியைக் கேட்டு அவருக்கு ரட்சிப்பின் அனுபவம் ஏற்பட்டு, பாவமன்னிப்பின் நிச்சயம் பெற்றவராய், ஆண்டவருக்கு தன் வாழ்வை அர்ப்பணித்தார்.
லண்டன் நகரத்தில் வெஸ்லியைச் சேர்ந்தவர்கள் தங்கள் முதல் ஆலய ஆராதனையை ஒரு பாழடைந்த இரும்பு ஆலையில் ஆரம்பித்தனர். சார்ல்ஸ் வெஸ்லியின் ஆல்டெர்ஸ்கேட் ரட்சிப்பு அனுபவத்திற்குப் பின் ஓராண்டுக்குள்ளாகவே, 1739ல் இவ்வாலயம் செயல்படத்துவங்கியது. இவ்வாலயத்தின் முதல் ஆராதனைக்கென்று சிறப்புப்பாடலாக சார்ல்ஸ் ’இன்று கிறிஸ்து எழுந்தார்’ எனும் இப்பாடலை எழுதினார்.
இந்த இரும்பு ஆலை ஆலயத்தில் வெஸ்லியினர் கூடிய நாட்களில், சார்ல்ஸ் பல புதுப்பாடல்களை எழுத அனைவரும் அவ்வாராதனைகளில் உற்சாகமாகப் பாடினார்கள். இவையனைத்தும் தொகுக்கப்பட்டு, ஒரு பாடல் புத்தகமாக ‘இரும்பு ஆலைப் பாடல்கள்’ என்ற தலைப்பில் வெளிவந்தது. இப்புத்தகத்தில் இப்பாடலும் ‘உயிர்த்தெழுந்த நாள் பண்டிகைப் பாடல்’ என்ற தலைப்புடன் சேர்க்கப்பட்டது. அதில் நான்கு வரிச் சரணங்கள் இருந்தன.
பதினேழாம் நூற்றாண்டில் சார்ல்ஸ் வெஸ்லி இப்பாடலை எழுதினபோது இதில் வரிகளுக்கு இடையில் வரும், ‘அல்லேலூயா’ என்ற வார்த்தை இல்லை. ஆனால், பின்னர் வெளிவந்த ஒரு பாடல் தொகுப்பில், அதின் நூலாசிரியர், உற்சாக தொனியோடு கர்த்தரைத் துதித்துப் பாட இதைச் சேர்த்தார்.
இந்த பாடலுக்கு ‘ஈஸ்டர் பாடல்’ (Easter hymn) என்ற ராகம் இணைக்கப்பட்டது. இதை அமைத்தவர் யாரென்று தெரியவில்லை.
சார்ல்ஸ் வெஸ்லி எழுதிய மற்றொரு பண்டிகைப்பாடல் ‘கேள் ஜென்மித்த ராயர்க்கே’ என்ற பாடலாகும். இப்பாடலின் இசையும், நாம் தூதருடன் சேர்ந்து கெம்பீரித்துப் பாடும் தொனியில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடப்பட்டது.
தகவல்கள் நன்றி: ’131 பாடல் பிறந்த கதை’, அமைதி நேர ஊழியங்கள்,
No comments:
Post a Comment