புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

சபையின் அஸ்திபாரம்

பாமாலை 172 - சபையின் அஸ்திபாரம்
பாமாலை 172 – சபையின் அஸ்திபாரம்
The Church’s one foundation
’அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர்’ கொலோ 1:18
’ஆதி சபையில் அப்போஸ்தலர் காலத்திலும், அதற்குப் பின்னாலும் வேதபுத்தகத்துக்கு மாறுபாடான பல புதுக்கொள்கைகள் தோன்றின. இவற்றை நீக்குவதற்காகவும், கிறிஸ்தவ அடிப்படைக் கொள்கைகளை நிர்ணயிப்பதற்காகவும் சபையின் மூப்பர்கள் அவ்வப்போது கூடி, அப்போஸ்தலர் விசுவாசப்பிரமாணம், நிசேயா விசுவாசப்பிரமாணம் முதலியவற்றை வகுத்தனர். ஆயினும் திருச்சபையில் கொள்கை வேறுபாடுகள் உண்டாகிக்கொண்டே வந்தன. தற்காலத்திலும் நம்மிடையில் பரிசுத்த ஆவியைப் பெற்று வேறு மொழிகளைப் பேசுதலே திருச்சபையின் அஸ்திபாரம் எனக்கூறும் பிரிவினரையும், முழுக்கு ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொள்ளுதலே மிகவும் முக்கியமானது எனப்போதிப்போரையும், ஏழாம் நாளை ஓய்வு நாளாக ஆசரிப்பதே மிகவும் முக்கியமான கற்பனை எனக்கொள்வோரையும், மற்றும் அநேக புதுக்கொள்கைகளைத் திருச்சபையின் அஸ்திபாரமாகப் போதிப்போரையும் காண்கிறோம்.
கடந்த நூற்றாண்டின் மத்தியில் தென் ஆப்பிரிக்காவிலுள்ள நட்டால் மாகாணத்தின் அத்தியட்சராகக் கோலன்ஸோ (John William Colenso, first Bishop of Natal) என்பவர் பணியாற்றி வந்தார். அவர் ரோமர் நிருபத்துக்கு ஒரு வியாக்கியானம் எழுதினார். அதில், பாவப்பரிகாரம் (Atonement), புனித மதச்சடங்குகள் (Sacraments), முதலியவற்றைக்குறித்து எழுதப்பட்டிருந்தவை புராதனக் கொள்கைகளுக்கு மாறாகக் காணப்பட்டன. அவரது மத வழிபாடுகளும் புராதன முறைகளுக்கு மாறாகவே இருந்தன. அவர் ஊழியம் செய்த இடத்திலுள்ள சூலு என்னும் ஆப்பிரிக்க மரபினரை அதிகமாக நேசித்து, அவர்களுக்கு சில தவறான முறைகளுக்கும் சம்மதம் கொடுத்தார். உதாரணமாக, பலதாரமணத்தைச் சம்மதித்தார். கடைசியாக, 1882ல் வேதபுத்தகத்திலுள்ள முதல் ஐந்து ஆகமங்களையும் குறைகூறும் ஒரு விமர்சனம் எழுதவே, ஆங்கிலத்திருச்சபை அவரை பலமாகக் கண்டித்து ராஜினாமா செய்யும்படி வற்புறுத்தியது. இவர் இங்கிலாந்துக்குத் திரும்பி வந்தவுடன், இக்காரணங்களுக்காக பலமாகத் தாக்கப்பட்டு, ஆலயங்களில் பிரசங்கங்கள் செய்யக்கூடாதென விலக்கப்பட்டார். மேலும் அவர் ஒரு மதபுரட்டர் (heretic) என்னும் நாமம் சூட்டப்பட்டு திருச்சபைக்குப் புறம்பாக்கப்பட்டார்.
Samuel J Stone
இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த பல மத வைராக்கியர்கள், கிறிஸ்து சபையின் அடிப்படைக் கொள்கைகளைக்குறித்துப் பல கட்டுரைகள் எழுதிப் பிரசுரித்தனர். அவர்களில் முக்கியமானவர் கேப்டவுண் மாகாணத்தின் பிரதம அத்தியட்சரான கிரே என்பவர். இவரது பிரசங்கங்களைப் படித்த சாமுவேல் ஜான் ஸ்டோன் (Samuel J Stone) என்னும் போதகருக்கு, கிறிஸ்து சபையின் உண்மையான அஸ்திபாரம் என்ன என்பதைக் காட்டும் ஒரு பாடல் எழுதவேண்டும் என்னும் ஆவல் உண்டானது. ஆகவே அவர், ‘சபையின் அஸ்திபாரம்’, எனும் பாடலை எழுதினார். ஒரு சமயப் புரட்டரின் தவறான கொள்கைகளால் தூண்டப்பட்டு எழுதப்பட்ட இப்பாடலானது, திருச்சபையின் உண்மையான அஸ்திபாரத்தைக் காட்டுகிறது.
இப்பாடலை எழுதிய சாமுவேல் ஜான் ஸ்டோன் என்பவர், ஆங்கிலத் திருச்சபையைச் சேர்ந்த ஒரு போதகர். அவர் 1839ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 25ம் தேதி இங்கிலாந்தில் ஸ்டாபோர்டுஷயர் மாகாணத்தில் உயிட்மோர் நகரில் பிறந்தார். அவரது தந்தையும் ஆங்கிலத் திருச்சபையின் ஒரு குருவானவரே. ஆரம்பத்தில் சாட்டர்ஹவுஸ் (Charterhouse) என்னும் ஊரிலும், பின்னர் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழகத்திலும் பயின்று, 1862ல் பி.ஏ. பட்டமும், 1872ல் எம்.ஏ. பட்டமும் பெற்றார். 1862 முதல் எட்டு ஆண்டுகள் வின்ட்சர் என்னுமிடத்தில் திருப்பணியாற்றினார். 1890 முதல் அவர் லண்டன் மாநகரில் அல்ஹாலோஸ் சபையின் தலைமைக் குருவாக ஊழியம் செய்தார். அவர் ஒரு சிறந்த கவிஞர். ஏழு செய்யுள் புத்தகங்களும், அனேக பாடல்களும் எழுதியுள்ளார். இவரது இதர பாடல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை.
ஜான் ஸ்டோன் போதகர் 1900ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், 19ம் தேதி தமது 61ஆம் வயதில் காலமானார்.
இப்பாடலை தமிழில் மொழிபெயர்த்தவர் அயர்லாந்தில் இருந்து இந்தியா வந்து மிஷினரி பணியில் ஈடுபட்ட பேராயர் ராபர்ட் கால்டுவெல் (Robert Caldwell) ஆவார். நமது இருநூற்றாண்டு கீதங்கள் புத்தகத்தில் அநேக (பாமாலை) பாடல்கள், இவர் ஆங்கில/ஜெர்மானிய பாடல்களில் இருந்து மொழிபெயர்த்தவை. பேராயர் ராபர்ட் கால்டுவெல் ஆங்கிலத்தில் இருந்து தமிழாக்கம் செய்து, அவருடைய மகள் மேரி கால்டுவெல் அவர்களால் பாடகருக்குக் கற்பிக்கப்பட்ட பாடலான ‘சபையின் அஸ்திபாரம்’ என்ற பாடல் முதன்முதலில் திருநெல்வேலி மாவட்டம் இடையன்குடி தூய திரித்துவ ஆலயப் பிரதிஷ்டையின்போது பாடப்பட்டது. பேராயர் கால்டுவெல் அவர்களின் அற்புதமான மிஷினரி வாழ்க்கை பற்றிய குறிப்புகள் இப்பதிவின் இறுதியில்..!
பேராயர் கால்டுவெல் குறித்த தகவல்கள் நன்றி: திரு. Stanly Samuel.

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory