*கோலாகலமாக நடந்த முதலூர் கோபுர முடிசூட்டு விழா*
நெல்லைச் சீமையில் உள்ள உயர்ந்த கோபுரங்களில் ஒன்று முதலூர் கோபுரமாகும் .
இது 1929 ஆம் ஆண்டு 216 அடி உயரத்தில் கட்டப்பட்டது .
கோபுர கட்டுமான வேலை 1926 இல் ஆரம்பமானது .
மக்கள் விருப்போடும் , விறுவிறுப்போடும் வேலை செய்தனர் .
பொந்தன் கிணற்றுப் பக்கம் வெட்டி எடுக்கப்பட்ட கனம் இல்லாத வெள்ளைக் கற்களால் இக்கோபுரம் கட்டப்பட்டது .
பன்னம்பாறை ஆசாரிமார்களும் , முதலூர் மக்களும் சேர்ந்து கற்களை செப்பம் செய்தார்கள் .
செக்குகள் போன்ற பெரிய தொட்டிகளில் சாந்துகளை மாப்போல அரைத்துத் தள்ளினார்கள் .
சாரம் கட்டக் கயிறுகள் கொழும்பிலிருந்து கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டன .
கோபுரம் ஊசிபோன்று ஆகிவிடாதபடி ஐந்து பெரிய கற்களை உச்சியில் அழகாக அமைக்கத் திட்டமிட்டார்கள் .
இந்தக் கற்களுக்கு கிரீடக் கற்கள் என்று பெயர் சூட்டினார்கள் .
கிரீடக் கல்லை மேலே ஏற்றும் நாளை சபை முழுவதும் கூடி விழா எடுத்தார்கள் .
ஒன்றரைப் பவுணில் ஒரு தங்கச் சிலுவை செய்தார்கள் .
ஆலய மணி ஒலிக்க , மேள வாத்தியங்கள் முழங்க , வாண வெடிகள் விண் அதிர , வாலிபர்கள் களியல் சிலம்பம் ஆட , பெண்கள் சந்தனக் கிண்ணத்துடன் சங்கீதம் பாட , பெரியவர்கள் வட்டத்தார் கட்டி , தலை இடை தோள்களில் நான்கு அங்கவஸ்திரங்கள் அணிந்து ஆடி மகிழ்ந்தார்கள் .
தங்கச் சிலுவையை கிரீடத்தின்மீது பதித்தபோது 12 குடம் தண்ணீரால் நீராட்டி லாசர் ஐயர் ஆசீர்வதிக்க கிரீடம் கப்பி மூலம் கோபுரத்தில் ஏறியது .
கோபுர முடிசூட்டுவிழா கோலாகலமாக நடந்தது .
--
No comments:
Post a Comment